ரத்த சோகையை குணமாக்கும் பேரீச்சம் பழம்
அத்தியாவசிய தாது உப்புக்களும் இதில் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் செல்களின் அன்றாட செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம். இரும்புச் சத்து இதில் அதிகம். உடலுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்துக்கு இரும்புச்சத்தின் தேவை மிகவும் அத்தியாவசியமானது. ரத்த சோகை உள்ளவர்கள் உலர் பேரீச்சம் பழத்தைச் சாப்பிடுங்கள்.வைட்டமின் ஏ, சி, இ, கே, பி காம்ப்ளெக்ஸ் என அனைத்து வைட்டமின்களும் இதில் நிறைவாக உள்ளன.
நம்முடைய உறுதியான எலும்பு மற்றும் பற்களுக்கு அவசியமான கால்சியம் சத்தும் நிறைவாக உள்ளது. கொலஸ்டிரால் இல்லை. அதைவிட ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் ஆற்றல் பேரீச்சம் பழத்தில் உள்ளதால், இதயத்துக்கு மிகவும் நல்லது. மேலும், இதில் சோடியம் மிகக் குறைவாகவும், பொட்டாசியம் அதிக அளவிலும் உள்ளன. இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் இதயத்தைப் பாதுகாக்கிறது. இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது.
இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் செரிமானத்தை எளிமையாக்கி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு உதவியாக இருக்கிறது. இதில் உள்ள நீரில் கரையாத நார்ச்சத்துக்கள், குடல் உற்பத்தி செய்யும் செரிமானத்துக்கு உதவும் அமிலங்களை உறிஞ்சி கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் அசிடிட்டி, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல் உள்ளிட்டப் பிரச்னைகளுக்கும் அருமருந்தாக விளங்குகிறது. முடி பிளவுறுவது, உதிர்வு போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும் ஆற்றல் பேரீச்சம் பழத்துக்கு உள்ளது. முடி வேர்களுக்கு நன்கு ஊட்டம் அளித்து முடி உதிர்வைத் தடுக்கிறது. முடியை வலுவாக்குகிறது.

Comments
Post a Comment